ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான்கள் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் பெஹ்லம் மாகாணம் பெஹ்லம்-இ-மர்ஹசி மாவட்டம் ஜர்-இ-குஷக் பகுதியில் நேற்று ஆப்கான் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இறுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 13 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 10 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • maalaimalar