ஜீவி. காத்தையா ஒரு முன்னுதாரண சமூக போராளி – சேவியர் ஜெயக்குமார்

நாடும்  இந்தியச் சமுதாயமும் ஒரு சிறந்த பொதுநலவாதியும், போராட்டவாதியும், பத்திரிக்கையாளருமான காத்தையா அவர்களின் மறைவைச் சந்தித்துள்ளது.

இந்த மறைவு மிக இக்கட்டான நேரத்தில் நடந்துள்ளது. இது இந்தியச் சமுதாயத்திற்கு  ஈடுகட்டமுடியாத இழப்பாகும் என்று குறிப்பிட்டார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

ஒரு முன்னால் தொழில் சங்கவாதியும், அரசியல் வாதியுமான காத்தையா தேசிய மற்றும் சமுதாய விவகாரங்களில்  மிகவும் துணிச்சலாகக் குரல் கொடுப்பவர். அவரின் இறுதி காலம் வரை கொள்கை மிக்க நல்ல பத்திரிக்கையாளராகவும், செம்பருத்தி இணைய இதழின் ஆசிரியராகவும் செயல் பட்டுவந்தார்.

குறிப்பாக இந்தியச் சமுதாயத்தில் அவலங்கள், குறை நிறைகளைச்  சுட்டி காட்டுவதிலும் முன்னோடியாகச் செயல்பட்டவராகும்.

இந்திய சமுதாயம் ஏமாளியாக, பிறர் கையை எதிர்பார்க்கும் சமுதாயமாக இருக்க கூடாது, அவர்களின் பணிவை  பலர்  பலவீனமாக கருதுவதால், அடிப்படை  உரிமைகள் கூட நம்மவர்களுக்கு மறுக்கப் படுகிறது என்று கூறியும்  எழுதியும் வந்த காத்தையா, தனது வாழ்நாள் முழுவதையும் இச்சமுதாயத்தின்  நல்வாழ்வுக்கு அர்ப்பணித்தவர். இவர் ஒரு முன்னுதாரண சமூக போராளி.

அவரின் மறைவு நாம் அனைவருக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பாகும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான சேவியர் ஜெயக்குமார்.