நியூயார்க் நகரை நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நிலைகுலைந்து போயுள்ளது என மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்கா அந்த வரிசையில் உள்ளது.

தற்போதையை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 68 ஆயிரத்து 203 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நிலைகுலைந்து போயுள்ளது என மேயர் பில் டி பிளாசியோ  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக, நியூயார்க்கில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் புல்லட் ரெயில் வேகத்தைக் காட்டிலும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

நியூயார்க் மாகாணத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது என்று சொன்னால், நியூயார்க் நகரத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை சரிபாதியைக் கடந்து 14 ஆயிரத்து 904 ஆக இருக்கிறது. நியூயார்க் நிலைமை பிற நகரங்களுக்கும் ஏற்பட்டால் அமெரிக்காவின் கதியை நினைத்தால் அது கதிகலங்குவதாகத்தான் இருக்கிறது.

maalaimalar