தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய நபருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனைக் கொலை செய்ததற்காகப் பெடரல் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைத்த பின்னர், ஒருவர் தூக்கிலிருந்து தப்பினார்.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் மற்றும் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஹஸ்னா முகமது ஹாஷிம் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பி ரமேஸுக்கு 12 ரோத்தான் அடி தண்டணை வழங்க உத்தரவிட்டது.

ஜூன் 12, 2016 அன்று கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அந்த நபருக்குத் தண்டனையை அனுபவிக்கவும் தெங்கு மைமுன் உத்தரவிட்டார்.

வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், ரமேசுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைச் சிறைத் தண்டனையாக மாற்ற அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டதாக, துணை அரசு வழக்கறிஞர் அஸ்மா மூசா நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இது நடந்தது.

மார்ச் 9, 2015 அன்று மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 10 மணிவரை முகமட் ஹாரிஸ் சரவணன் அப்துல்லா (36) என்பவரைக் கொலை செய்த வழக்கில் ரமேஸ் குற்றவாளியென ஜொகூர் பாரு உயர்நீதிமன்றம் அக்டோபர் 29, 2018 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஜொகூர், குலைஜெயா மாவட்டத்தின் செனாய், ஜாலான் சீலோங்-உலு திராம், கம்போங் மெலாயு சீலோங் செலாட்டனில் உள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் இன்னும் தலைமறைவாக இருக்கும் மற்ற நான்கு நபர்களுடன் ரமேஸ் குற்றத்தைச் செய்தார்.

நவம்பர் 9, 2022 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது மற்றும் அவரது தண்டனை மற்றும் மரண தண்டனையை உறுதி செய்தது.

இறந்தவரும் அவரது மைத்துனரும் எண்ணெய் பனை தோட்டத்திற்கு போதைப்பொருள் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகச் சென்றதாகவும், இறந்தவரின் மைத்துனர் ரமேஸ் இறந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், அவர் (ரமேஸ்) ஒரு கத்தி எடுத்து இறந்தவரின் வயிற்றிலும் கைகளிலும் வெட்டுவதையும் பார்த்ததாகவும் வழக்கின் உண்மைகள் வெளிப்படுத்தின

மற்றொரு வழக்குரைஞர் சாட்சி – சம்பவ இடத்தில் இருந்த ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் – ரமேஸ் இறந்தவரின் கழுத்தை ஒரு சரத்தால் நெரித்ததைக் கண்டார், பின்னர் அவரது உடலையும் அவரது தனிப்பட்ட பொருட்களையும் ஒரு கேன்வாஸ் மற்றும் காற்று மெத்தையில் சுற்றி சக்கர வண்டியில் வைப்பதைக் கண்டார்.

குற்றம் நடந்த இடத்திலிருந்து சக்கர வண்டியை வெளியே தள்ளுமாறு குற்றம் சாட்டப்பட்டவர் நான்கு நபர்களுக்கு அறிவுறுத்தினார்.

ரமேஸ் சார்பில் வழக்கறிஞர் பெர்னார்ட் ஜார்ஜ் ஆஜரானார்.