கொரோனா சிகிச்சைக்காக மருந்துகளை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் டிரம்ப் வேண்டுகோள்

கொரோனா வைரசைக்கட்டுப்படுத்த மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அளிக்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

வாஷிங்டன், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தடை விதித்தது.  எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ஆர்டர் செய்த அளவு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் என்று டிரம்ப், மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறும் போது, “ இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும்  கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.  கொரோனா  வைரைசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கிறது.

இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவில் இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. ஆனால், இந்தியாவில் அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள்கிடைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன். பிரதமர் மோடியும் தீவிரமாகப் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்” என்றார்.

dailythanthi