கோவிட்-19: புதிய சிவப்பு மண்டலம் இல்லை

கோலாலம்பூர், ஏப்ரல் 12 – நேற்று மதிய நிலவரப்படி மொத்தம் இருபது மாவட்டங்கள் கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. லெம்பா பந்தாய் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், லெம்பா பந்தாய் மாவட்டத்தில் மொத்தம் 459 கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஹுலு லங்காட் மற்றும் பெட்டாலிங்கில் முறையே 378 மற்றும் 335 பாதிப்புகள் உள்ளன.

41க்கும் மேற்பட்ட கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் பதிவானால் சிவப்பு மண்டல பகுதி என வகைப்படுத்தப்படும். அதுபோல், ஆரஞ்சு மண்டலம் (20-40 பாதிப்புகள்), மஞ்சள் மண்டலம் (1-19 பாதிப்புகள்) பச்சை மண்டலம் (பாதிப்புகள் இல்லை) என்று வகைப்படுத்தப்படும்.

1,183 பாதிப்புகளுடன், சிலாங்கூர் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளை பதிவாக்கியுள்ளது. லாபுவான் மொத்தம் 15 பாதிப்புகளுடன் மிகக் குறைவான பாதிப்பு உள்ள பகுதியாகும்.

இதற்கிடையில், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா நேற்று (ஏப்ரல் 11) 34வது இடத்தில் உள்ளது. இங்கு 4,530 நேர்மறை பாதிப்புகள் மற்றும் 73 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, உலகளவில் மொத்தம் 1,696,323 கோவிட்-19 பதிவாகி, இதில் 102,672 பேர் உயிரிழந்துள்ளனர்.

BERNAMA