கொரோனா சிகிச்சைக்காக மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு

அண்டோனியோ குட்டரஸ்

கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

இதையடுத்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா பெருந்தொற்று நோய் என்பதால் அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல் கொரோனாவை ஒழிக்க மற்ற நாடுகளுக்கு உதவும் நாடுகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

அமெரிக்கா, மொரீஷியஸ், செசல்ஸ், ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, இலங்கை, பிரான்ஸ், மியான்மர், ஜாம்பியா, உகாண்டா, எகிப்து, அர்மீனியா, கஜகஸ்தான், கென்யா, ஜோர்டான், ஜமைக்கா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்த மாத்திரைகளால் பலன்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar