எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர் பலி – சிரியாவில் சோகம்

குண்டுவெடிப்பு நடந்த பகுதி

சிரியாவில் எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். டமாஸ்கஸ்:சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போரின் போது குர்திஷ் போராளிகள் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தன்னிச்சையாக ஆட்சி நடத்தி வந்தனர்.

இந்த போராளிகள் குழுவை ஒழிக்க ரஷியா உதவியுடன் சிரியா பல ஆண்டுகளாக சண்டையிட்டது. இதற்கிடையில், சிரியாவில் செயல்பட்டு வந்த குர்திஷ் போராளிகளை பயங்கரவாதிகள் என கூறிவந்த துருக்கி அவர்கள் மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதேபோல், போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் அலெப்போ மாகாணத்தையும் துருக்கி கடந்த 2018-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

மேலும், அலெப்போவில் உள்ள குர்திஷ் போராளிகளை அழிக்கும் நடவடிக்கையில் துருக்கி படையினரும், அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், குர்திஷ் போராளிகளுக்கும், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலொப்போ மாகாணம் அஃப்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இன்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட எரிபொருள் கொண்டுவந்த லாரி ஒன்று நிறுத்தபட்டிருந்தது.

மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் வெடிகுண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி திடிரென வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சிரியாவின் அஃப்ரின் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் தான் காரணம் என துருக்கி அரசு குற்றச்சாட்டியுள்ளது.

malaimalar