கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: சீன நிறுவனம் அறிவிப்பு

பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா வைரசிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடியை கண்டறிந்துள்ளதாகவும், இத்தாலி தரப்பில், தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாகவும் கூறியுள்ளன.

இந்நிலையில் சீனாவும் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. குரங்குகளுக்கு இம்மருந்தை செலுத்தி, 3 வாரங்கள் கழித்து கொரோனா தாக்குதலுக்கு உட்படுத்தினர். அடுத்த ஒரு வாரம் கழித்து சோதனை செய்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மருந்து செலுத்தப்படாத கொரோனா தொற்றுக்கு உள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

dinamalar