BPN முறையீட்டு காலம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் (பிபிஎன்) நிதி உதவிக்குத் தகுதியான ஆனால் இன்னும் கிடைக்கப்பெறாத நபர்கள், மே 31 வரை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களின் புகார்களைக் கேட்டதாகப் பிரதம மந்திரி முகிதீன் யாசின் கூறினார்.

அவர்களில் சிலர் வேலை இழந்துள்ள போதிலும் பிரிஹாத்தின் நிதி உதவி பெறத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

“இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, பிபிஎன் விண்ணப்பங்களுக்கான மேல்முறையீட்டு காலத்தை 2020 மே 31 வரை நீட்டிக்க நிதியமைச்சர் ஒப்புக் கொண்டார்.”

“மின்னஞ்சல்களை அனுப்புவது மட்டுமல்லாமல், தங்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாத விண்ணப்பதாரர்கள் 2020 மே 11 முதல், முறையீடு செய்வதற்காக உள்நாட்டு வருமான வரித்துறை (Lembaga Hasil Dalam Negeri (LHDN) கவுண்டர்களுக்கும் நேரடியாகச் செல்லலாம்.

“அனைத்து முறையீடுகளும் அங்கீகரிக்கப்படும் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் தகுதிவாய்ந்த நியாயமான முறையீடுகள் அங்கீகரிக்கப்படும்” என்று அவர் இன்று டிவி 1 இல் தனது செய்தியில் கூறினார்.

நேற்று பந்துவான் பிரிஹாத்தின் நேஷனல் நிதி உதவி பெறாத மக்களிடையே அதிருப்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகின. இது குறிப்பாக பணி நிறுத்தப்பட்டவர்கள் அல்லது நிலையான வருமானம் இல்லாதவர்கள் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உள்ளடக்கி இருந்தன.

இன்று, அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி எஸ்.எஸ்.எம்-மில் வணிகத்தை பதிவு செய்துள்ள சிறு வணிகர்களுக்கும் பிபிஎன் திட்டத்தை விரிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

முறையீடுகள் உட்பட 2.3 மில்லியன் பிபிஎன் விண்ணப்பங்களுக்கு நேற்று அரசு ஒப்புதல் அளித்தது.

முழுமையான தகவல் இல்லாத விண்ணப்பங்களும், வருமான தகுதிகளை மீறிய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்று முகிதீன் மேலும் தெரிவித்தார்.