உப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்

திருகோணமலை – கிண்ணியாவின் கச்சக்கொடுத்தீவு, முனைச்சேனை, அரை ஏக்கர் போன்ற பிரதேசங்களில், சுமார் 150 ஏக்கரில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவரும் உற்பத்தியாளர்கள், தற்போதைய கொரோனா வைரஸ் இடர்  நிலைமையில் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பிரதேசங்களையும் காக்காமுனை, நடுஊற்று, வில்வெளி போன்ற பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள், உப்பு உற்பத்தியை மேற்கொண்டு, அதனையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக, உப்பு உற்பத்தியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் தங்களுக்கான விளைச்சலைப் பெற முடியாதுள்ளதாகவும்  உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் உப்பு உற்பத்தியை மேற்கொண்ட போதிலும் அதனால் கிடைக்கப்பெறும் விளைச்சலை விற்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

உப்பை கொள்வனவு செய்வதற்காக  புத்தளம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் போன்ற வெளி மாவட்டங்களில்  வியாபாரிகள் வருவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கருத்திற்கொண்டு, வட்டி இல்லாத கடன், நிவாரணங்கள், மானிய அடிப்படையிலான கடன்களை வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்

Tamilmirror