“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத் சதிக்

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது பெரும்பாலான பொருளாதார செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில், பல்கலைக்கழகக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான்.

கல்விக் கட்டணங்கள் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் வருவதாக அவர் கூறினார்.

“கல்விக்கூடங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பியிருந்தாலும், அவர்களின் கல்வி நிறுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், கட்டணம் மட்டும் இன்னும் அப்படியே செலுத்தப்பட வேண்டியுள்ளது.”

“என்னைப் பொறுத்தவரை, இது விரைவில் மாற்றப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“வகுப்புகள் இன்னும் இயங்கினால், அது ஆன்லைனில் மட்டுமே செய்யப்படுகின்றன”, என்று கூறினார்.

“சில மாணவர்களுக்கு இணைய வசதியும் இல்லை, அவர்களால் படிக்க முடியவில்லை. பல்கலைக்கழகங்களையும் பயன்படுத்த முடியவில்லை” என்று அவர் இன்று முகநூல் வழியாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தொடர்ந்து, பல பெற்றோர்கள் வேலை இழந்தும், பொருளாதாரம் கொந்தளிப்பில் உள்ள நிலையில், குறைந்த வருமானம் (பி40) கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“பல்கலைக்கழகக் கட்டணங்கள் மீதான சுமையை அரசாங்கம் அவர்களின் மீது அதிகரிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அவர்களின் நல்வாழ்வைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது மறுக்க முடியாத ஒரு பொறுப்பு. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது கட்டணம் செலுத்தும் சுமை காரணமாக கல்விக்கூடங்களில் இருந்து வெளியேற வேண்டிய மாணவர்கள் யாரும் இருக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.