தென்கொரியாவுக்கு எதிராக 12 லட்சம் துண்டு பிரசுரங்களை அனுப்ப வடகொரியா முடிவு

சியோல்,  வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் 2018 ஆம் ஆண்டு கொரிய எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி சந்தித்து பேசினர்.இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நீடித்து வந்த பகைமை மறைந்து இணக்கமான சூழல் உருவானது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற விரோத செயல்களை தடுப்பது ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்களை வீசியதோடு, ஹீலியம் பலூன்களை அனுப்பியது வடகொரியாவுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்கை தென்கொரியா தடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டிய வடகொரியா, தென் கொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக எல்லையில் உள்ள இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து.

மேலும் தென் கொரியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாக தெரிவித்த வடகொரியா எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு தனது ராணுவத்தை அனுப்பி வைத்தது.இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இந்த நிலையில் தென் கொரியாவுக்கு உளவியல் ரீதியான பதிலடி தரும் விதமாக அந்த நாட்டுக்கு எதிராக தகவல் பிரசாரத்தை மேற்கொள்ள வடகொரியா முடிவு செய்துள்ளது.

அதாவது தென்கொரியாவுக்கு எதிராக எல்லையில் துண்டு பிரசுரங்களை வழங்கவும், ஹீலியம் பலூன்களை பறக்க விடவும் வடகொரியா திட்டமிட்டுள்ளது.அதன்படி சுமார் 12 லட்சம் துண்டு பிரசுரங்கள் தயார் செய்து கொரிய எல்லையில் வினியோகிக்கப்பட உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பு எந்திரம் மூலம் எல்லையில் 12 லட்சம் துண்டுபிரசுரங்கள் மற்றும் 3,000 பலன்களை பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

எதிரிகளுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வினியோகம் எங்கள் திட்டம் வடகொரியா மக்களின் ஒட்டுமொத்த கோபத்தின் வெளிப்பாடாகும்.எல்லையில் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பது இரு நாடுகளிடையேயான ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பதை நாங்கள் அறிவோம்.ஆனால் அந்த ஒப்பந்தம் தற்போது உயிர்ப்புடன் இல்லை. எனவே தென் கொரியாவுக்கு எதிரான பதிலடிகள் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தென்கொரியாவுக்கு எதிராக ஒலிபெருக்கி மூலம் பிரசாரங்களை மேற்கொள்ள வட கொரியா எல்லையில் ஒலிபெருக்கிகளை நிறுவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எல்லையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் முடிவை வடகொரியா கைவிட வேண்டும் என தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் யோ சாங்கே கூறுகையில் “தென்கொரியாவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் திட்டம் இரு நாட்டுக்கும் எந்த பயனும் தராது“ என கூறினார்.

dailythanthi