பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பாராட்டு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை கட்டுப்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு இணையாக தலிபான் அமைப்பில் பயங்கரவாதிகள் உள்ளனர். இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் பல அப்பாவி குடிமக்கள் அனுதினமும் பலியாகி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு சில நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. அதே சமயத்தில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு தாலிபானை எதிர்த்துப் போராட ஆதரவு தெரிவித்து வருகின்றன.

பயங்கரவாதிகள் அவ்வப்போது ஆப்கானிஸ்தான் குடிமக்களின் வீடுகளில் புகுந்து சரமாரித் துப்பாக்கித் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதேபோல ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்து குமர் கல் என்கிற 15 வயது பெண்ணின் தாய், தந்தை ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

இதனையடுத்து ஆத்திரம் அடைந்த குமர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட, தீவிரவாதிகள் பயந்து ஓடினர். தற்போது குமார் தாலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடிய இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இவர் சமீபத்தில் துப்பாக்கி ஏந்தியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதேபோல் எத்தனை தீவிரவாதிகள் வந்தாலும் என் தாய் தந்தையரை கொன்ற அவர்களைப் பழிவாங்குவேன் எனத் தெரிவித்துள்ளார். குமரின் தாய் தந்தையர் போல பல அப்பாவி ஆப்கானிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்க தான் தொடர்ந்து போராட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீரச் செயல் மத்திய தரைக்கடல் நாடுகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinamalar