துபாயில் மேற்கொள்ளும் பாலைவன சாகச பயணம் – உலகின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக தேர்வு

பாலைவனத்தில் ஒட்டக பயணம்

துபாய் நகரில் மேற்கொள்ளப்படும் பாலைவன சாகச பயணம் உலகின் மிகச்சிறந்த பொழுது போக்கு அனுபவமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

துபாய்: உலகின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவம் பற்றி சர்வதேச டிராவல் நிறுவனம் கடந்த 12 மாதங்களாக ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

துபாய் நகருக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் தங்களது பொழுதை கழிக்க அதிகமாக வருகின்றனர். இங்கு உள்ள பாலைவனத்தில் கார்கள் மூலம் மேற்கொள்ளும் சாகச பயணம், மேலும் பாலைவனத்தில் இறைச்சியை சுட்டு சாப்பிடுவது, பாலைவனத்தில் ஒட்டக பயணம் ஆகியவை உலகின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அனுபவமாக கருதப்படுகிறது.

மேலும் பாலைவன மணலில் சூரியன் மறையும் காட்சியை பார்ப்பது ஒரு அலாதியான இன்பமாகும். இந்த பாலைவன சாகசங்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவரையும் கவர்வதால் இந்த பொழுதுபோக்கு உலகின் மிகச்சிறந்த பொழுது போக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தை தலைமை செயல் அதிகாரி இசாம் காசிம் கூறியதாவது:-

துபாய் நகரின் சாகச சுற்றுலா பயணங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக பாலைவன சாகச சுற்றுலா பயணங்கள் அதிகமாக மக்கள் மத்தியில் விரும்பப்படுகிறது. இந்த சுற்றுலா திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.

தொடர்ந்து பாலைவன சாகச பயணத்துக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக துபாய் நகருக்கு சுற்றுலா வர முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம் சுற்றுலாத்துறை சார்ந்த வருவாய் அதிகரிக்க உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்

dailythanthi