கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு- நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு

வாஷிங்டன்: நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தை வியாழக்கிழமை இரவு ரிக்கெட் மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விர்ஜினியாவில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட், விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட தயாரானது. ஆனால், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. கோளாறை சரிசெய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சனை சரி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு ராக்கெட் ஏவும் பணி தொடங்கும் என நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, விர்ச்சுவல் கேமரா, கம்ப்யூட்டர் சாதனங்கள், பரிசோதனைக் கருவிகள் என 8,000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்கள் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

malaimalar