துருக்கி நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்து உள்ளது.

அங்காரா, துருக்கி நாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு 3.77 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர்.  இது தவிர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அந்த நாட்டில் மற்றொரு சோக நிகழ்வு நடந்துள்ளது.  துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன.

இங்கு 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன.  இதுதவிர ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.  இதனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது என்றும் 961 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தவிர அருகேயுள்ள சமோஸ் உள்ளிட்ட கிரேக்க தீவு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  இதில் 2 பேர் பலியானார்கள்.  20 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டரில் பதிவானது என கிரேக்க நிலநடுக்கவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

dailythanthi