கோவிட் 19 : இன்று 2,188 புதியத் தொற்றுகள், 4 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில் 2,188 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக அதிகமான எண்ணிக்கையைக் காட்டுகிறது.

மேலும், நேற்றையத் தினத்தைப் போலவே, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள ‘டோப் க்ளோவ்’ தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய ‘தெராத்தை திரளை’யால் இன்று அதிகமான பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

இன்று சிலாங்கூரில் பதிவாகியுள்ள 1,623 பாதிப்புகளில், 1,511 பாதிப்புகள் தெராத்தை திரளையிலிருந்து வந்தவை எனச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

இந்நிலையில், 1,673 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, இத்தொற்றிற்கு நால்வர் பலியாகியுள்ளனர். ஒருவர் பினாங்கிலும், மேலும் மூவர் சபாவிலும் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 341-ஆக உயர்ந்துள்ளது.

அவசரப் பிரிவில் 112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 49 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

1,623 புதிய சம்பவங்களுடன், சிலாங்கூர் அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது. அதனையடுத்து, சபாவில் 232 புதியப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

திரெங்கானு, பஹாங், புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

சிலாங்கூர், சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

பேராக்கில் 112, நெகிரி செம்பிலானில் 73, கோலாலம்பூரில் 90, ஜொகூரில் 19, பினாங்கில் 15, கெடாவில் 14, கிளந்தானில் 6, மலாக்காவில் 2, சரவாக் மற்றும் லாபுவானில் தலா 1.