ரெட்சுவான் : மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு RM300 செலுத்தும் ‘ஒன்-ஆஃப்’ தொகை வழங்கப்படாது

மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டிய தொகை அல்லது ‘ஒன்-ஆஃப்’ RM300 வழங்க வேண்டும் என்ற ஃபஹ்மி ஃபட்ஸில் (பி.கே.ஆர்- லெம்பா பந்தாய்) முன்மொழிவைப் பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு கடமைகள்) மொஹமட் ரெட்சுவான் யூசோஃப் நிராகரித்தார்.

நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள், தாதியர், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள குழுவினர், கோவிட் -19 “ஒன்-ஆஃப்” மானியத்தைப் பெற தகுதியுடையவர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் அதில் அடங்கவில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ரெட்சுஜுவான் (பெர்சாட்டு- அலோர் காஜா) கூறினார்.

“நாட்டின் நிதி வளத்தைக் கணக்கில் கொண்டு, RM300 தொகையைச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது,” என்று நேற்று மக்களவை அமர்வின் போது ரெட்சுவான் கூறினார்.

தொற்றுநோய்களின் போது, அதிக ஆபத்துள்ள இடங்களில் பணியாற்றும் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் காரணமாக அவர்ளுக்குச் சிறப்பு கொடுப்பனவுகளை வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் RM300 “ஒன்-ஆஃப்” உதவியை RM500 ஆக உயர்த்தவும் ஃபாஹ்மி பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும், ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் காவல்துறையினர் RM200 சிறப்பு கொடுப்பனவைப் பெற்று வருவதால், இதைச் செயல்படுத்த முடியாது என்றும் ரெட்சுவான் கூறினார்.