கோவிட் 19 : இன்று 1,937 புதியத் தொற்றுகள், 55 % கிள்ளான் பள்ளத்தாக்கு

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,937 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 9 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் (54.8 %), சபாவிலும் (22.1 %) பதிவாகியுள்ளன.

ஜொகூரில் இன்று, பாதிப்புகள் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியுள்ளது.

அதேவேளையில், 911 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இன்று ஒன்பது பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். மூன்று நோயாளிகள் ஜொகூர், குளுவாங்கிலும்; சபா, சண்டக்கானில் மூவர், துவாரானில் ஒருவர்; பினாங்கில் ஒருவர், சுங்கை பூலோவில் ஒருவர் எனப் பதிவாகியுள்ளது. ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 411 எனப் பதிவாகியுள்ளது.

அவசரப் பிரிவில் 121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 66 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 823, சபாவில் 426, கோலாலம்பூரில் 238, ஜொகூரில் 105, பினாங்கில் 102, பஹாங்கில் 79, பேராக்கில் 62, நெகிரி செம்பிலானில் 49, கெடாவில் 16, லாபுவானில் 11, திரெங்கானுவில் 6, மலாக்காவில் 5, சரவாக் மற்றும் கிளந்தானில் தலா 1.

இன்று, 3 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

புக்கிட் கெமுக் திரளை – சபா, தாவாவ் மாவட்டம்; செண்டானா கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், தித்திவங்சா & செராஸ் மாவட்டங்கள்; டாங் முத்தியாரா திரளை – சிலாங்கூர், கோம்பாக் & திரெங்கானு, கெமாமான் மாவட்டம்.