150 இந்திய மாணவர்களின் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் அரசு செலுத்துகிறது

டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் 150 இந்திய மாணவர்களுக்கானக் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் மாநில அரசு வழங்கும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில், தங்கள் படிப்பைத் தொடரும், மாதந்திர வருமானம் RM2,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அக்கல்வி நிதி வழங்கப்படும் என மாநிலத்தின் சமூக நலத் திட்டத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர், வி கணபதிராவ் தெரிவித்தார்.

“உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அந்தந்த உயர்க்கல்வி கூடங்களுக்கு, சிலாங்கூர் அரசாங்கம் நேரடியாக முழு கட்டணத்தையும் செலுத்தும்.

“உதவி தொகையின் மொத்த மதிப்பு RM600,000 ஆகும்,” என்று வி கணபதிராவ் தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, டிப்ளோமா மட்டத்தில் படிப்பைத் தொடரும் மாணவர்கள் RM3,000 உதவியையும், பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் RM5,000-யும் பெறுவார்கள்.

“கல்வி உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், உயர்க்கல்வி நிறுவனத்தின் அழைப்புக் கடிதத்தை அவர்கள் ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.