தோமி தாமஸ்`க்கு எதிராகப் போலிஸ் புகார் செய்யவுள்ளார் அபாண்டி

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் மொஹமட் அபாண்டி அலி, முன்னாள் சட்டத்துறைத் தலைவரான தோமி தாமஸ் மீது போலீஸ் புகார் அளிக்கவுள்ளார்.

முன்னாள் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியான அபாண்டி, இன்று மாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள செந்தூல் காவல் நிலையத்தில் அப்புகாரை தான் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மலேசியாகினியின் கேள்விக்குக் குறுஞ்செய்தி மூலம் பதிலளித்த அவர், சுருக்கமாக “ஆம்,” கூறினார்.

சமீபத்தில் வெளியான தாமஸின் நினைவுக் குறிப்பு தொடர்புடையதா என்று கேட்டபோது, ஆம் என்றும் கூறினார்.

இன்று பிற்பகல், அவரை வழக்கறிஞர் பால்ஜித் சிங் சித்து பிரதிநிதிப்பார் என்றும், பின்னர் ஊடக அறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் அபாண்டி கூறினார்.

அபாண்டி தனது புகார் குறித்த தகவல்களைக் குறிப்பிடவில்லை.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட எஸ்.ஆர்.சி. சர்வதேச வழக்கை வழிநடத்தவும் கண்காணிக்கவும் தன்னால் இயலாது என்று, தாமஸ் தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதற்கு எதிராக, முன்னாள் அரசு வழக்குரைஞர் ஹனாபியா ஜகாரியாவும் நேற்று ஒரு போலீஸ் புகார் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.