இன்று 2,437 புதிய நோய்த்தொற்றுகள், 9 மரணங்கள் பதிவாகின

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,437 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

புதியப் பாதிப்புகளில் 1,226 மலேசியர்களையும், 1,209 வெளிநாட்டினரையும் சேர்ந்தவையாகும்.

மலேசியாவில் ஒட்டுமொத்த கோவிட் -19 நேர்வுகள் 300,000-ஐத் தாண்டி, இன்று ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது.

இன்று 3,251 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இதற்கிடையில், ஒன்பது இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்களில் எண்மர் மலேசியர்கள். ஆக, நாட்டில் இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 1,130 ஆக அதிகரித்துள்ளது.

சிலாங்கூர் (3), சரவாக் (2), மலாக்கா (1), ஜொகூர் (1), பேராக் (1) மற்றும் கிளாந்தானில் (1) என மரணங்கள் பதிவாகியுள்ளன.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (914), ஜொகூர் (340), கோலாலம்பூர் (337), பேராக் (287), சரவாக் (171), சபா (134), பினாங்கு (105), நெகிரி செம்பிலான் (65), கிளாந்தான் (33), கெடா (13), திரெங்கானு (12), பஹாங் (11), மலாக்கா (10), புத்ராஜெயா (3), லாபுவான் (2).

இன்று கண்டறியப்பட்ட அனைத்து  9 புதியத் திரளைகளும் பணியிடம் சார்ந்தவை. ஜொகூரில் 4, சிலாங்கூரில் 3, கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் தலா 1.