‘தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் “நாம் தமிழர் கட்சியை” தேர்வு செய்ய வேண்டும்!’

உலகத் தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழர் தாயக மண்ணான தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலர, தமிழகத் தமிழர்கள் தமிழர் தேசியம் வழிநின்று வாக்களிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுக்கிறது.

அதற்கு அடித்தளம் அமைத்து, அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் தமிழக நாம் தமிழர் கட்சி சமரசமின்றி தனித்து நிற்கையில், வருகிற ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அவர்களது “விவசாயி” சின்னம் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் வேட்கையும் விருப்பமும்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக, தமிழர் மண்ணை ஆரியத் திராவிட நயவஞ்சக பேர்வழிகளை ஆள விட்டதால், தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, தமிழர்கள் உரிமை உடமைகளை இழந்து சாதிக்கும் மதத்திற்கும் மதுவிற்கும் இலவசத்திற்கும் அடிமையானதுதான் மிச்சம்.

உலகிற்கே அன்னமிட்டத் தமிழர் தாய் நிலத்தை அழிக்க, மீத்தேன், நியூட்ரோ, செதெர்லைட், கெயில் எரிவாயு, அய்ட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல், கூடங்குளம் அணுவுலை போன்ற அம்மண்ணை மடலாக்கும் எண்ணற்றத் தீய அபாயகரத் திட்டங்களைக் கையெழுத்திட்டு வரவேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று நீர் உரிமை, நீட் தேர்வு, விவசாயி கடன், மீனவர் பாதிப்பு போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களுக்காகத் தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கப்பட வைத்தனர்.

செம்மொழி தமிழாய்வு மையத்தை முடக்கியது, ஆர்வர்ட் பல்கலைக்கழகத் தமிழர் இருக்கை அமைய இடையூறு செய்தது, தமிழரின் வரலாற்று அடையாளமான கீழடியை மூடியது, வெள்ளம், காசா புயல், யோகி புயல் போன்ற இயற்கை பேரிடரால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உரிய நிவாரணத்தைத் தட்டி கேட்டு பெற முடியாதக் கையாலாகாத அரசாகத்தான் தமிழ்நாடு இருந்து வருகிறது.

இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, காவல்துறை அடக்குமுறைகள், புதிய மீன்பிடி கொள்கை, குடியுரிமை சட்ட மசோதா, பணமதிப்பிழப்பு, பொருள், சேவை வரி (ஜி.எஸ்.தி.) மற்றும் வரி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேசு சிலிண்டர் விலை உயர்வு, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, எட்டுவழிச்சாலை, வேளாண் மசோதா, தமிழகப் பணியில் வட இந்தியர் நியமனம், குலக்கல்வி எனப் புதியக் கல்வி கொள்கை, டெல்டா பகுதிகள் கார்ப்ரேட்டுகளுக்குத் தானம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் போன்ற கணக்கிட முடியாத நாசகாரச் செயல்களைக் கடந்து விட முடியாது.

இவை அனைத்தையும் விட தமிழர் இரண்டாவது தாயக மண்ணான தமிழ் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளைச் சிங்கள இனவெறிக்குக் காவு கொடுத்து அமைதி காத்தது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்றதற்குக் கேள்வி எழுப்பாதது, சிங்களக் கடற்படையினரால் 850 மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதியைக் கேட்காது, சல்லிக்கட்டு போராட்டத்தில் தானே கலவரம் தூண்டி மாணவர்களை அடித்தது, தமிழகக் கூலி தொழிலாளியை நிர்வாணமாக்கி கன்னட வனத்துறை அதிகாரிகள் அடித்தது, காவிரி சிக்கலில் தமிழகக் கனரக ஓட்டுநர்கள் மற்றும் அங்கு வசிக்கும் தமிழர்களை அடித்தது, தமிழகப் பெண்ணைக் கேரளா இளைஞர்கள் கலங்கப்படுத்தியது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் படுகொலை, ஆளும்கட்சி அதிகாரத்தில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் போன்ற இன்னும் எத்தனையோ கொடுமைகளை உலகத் தமிழர்கள் மறந்து விட மாட்டார்கள்.

ஆகவே, தமிழகத் தமிழர்களுக்கு ஒரே கடைசி வாய்பாக ஓட்டுரிமை வழி நமது இனம், மொழி, சமயம் பண்பாடு, உரிமை, உடமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்றவற்றில் மீட்சி பெற, தமிழாய்ந்த தமிழர்கள் தான் தமிழர் மண்ணை ஆள வேண்டும்.

உலகையே ஆண்ட பரம்பரையைக் கொண்ட தமிழர்கள் தற்போது தமிழர் மாநில மண்ணையாவது ஆள தமிழக மக்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும், நம்மிலிருந்து வந்த எளிய பிள்ளைகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து நாளையத் தலைமுறை பிள்ளைகள் நல்வாழ்வுக்காக விருப்பு வெறுப்பின்றி தமிழர் தேசிய இன மகனாய் உழைக்க வேண்டும்.

அதற்கு உலகத் தமிழர்கள் அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும். அவ்வரிசையில் மலேசியத் தமிழர்கள் சார்பில் சில முன்னெடுப்புகளை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், பிறத் தோழமை இயக்கங்களோடு செய்து வருகிறது.


பாலமுருகன் வீராசாமி , ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், மலேசியா