இன்று 7,289 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,289 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

நாட்டைத் தாக்கியுள்ள தொற்றுநோயின் ஆக அதிக தினசரி எண்ணிக்கை இதுவாகும்.

6,000-க்கும் மேற்பட்ட தினசரி புதிய நேர்வுகள் பதிவுசெய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அந்த எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகியப் பகுதிகள் இணைந்து 3,269 புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், இன்று 60 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,369 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 3,789 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 373 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,642), ஜொகூர் (664), கோலாலம்பூர் (604), சரவாக் (513), கிளந்தான் (425), நெகிரி செம்பிலான் (410), பினாங்கு (380), கெடா (336), திரெங்கானு (268), சபா (266), மலாக்கா (258), பேராக் (218), பஹாங் (211), லாபுவான் (63), புத்ராஜெயா (23), பெர்லிஸ் (8).

மேலும் இன்று, 15 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.