வாடகை வாகனத்தில் இருவர் பயணிக்க அரசு அனுமதி வேண்டும்

வாடகை வாகனத்தில் இரு பயணிகள் பயணிக்க அரசு அனுமதிக்க வேண்டுமென, நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கையை முன் வைத்துள்ளது.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாடு விதிமுறைகளின்படி, வாடகை வாகனத்தில் அவசர மருத்துவப் பயணத்திற்கு இருவரும், இதரப் பயணத்திற்கு ஒருவர் மட்டுமே பயணிக்க முடியுமென்ற நிலை இருக்கிறது என அதன் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

ஏற்கனவே, போதிய வருமானத்தை இழந்த நிலையில், இந்த ஆணை மேலும் எங்களுக்கு பெரும் சுமையைக் கொடுக்கிறது என்றார் அவர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அல்லது ஓர் இடத்துக்குச் செல்ல விரும்பும் இரு பயணிகள், இரு வாடகை வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். இது அவர்களுக்கும் சுமை ஓட்டுநர் எங்களுக்கும் இழப்பு.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே, குறைந்தபட்சம் வாடகை வாகனத்தில் இருவர் பயணிக்கவும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மூவர் பயணிக்கவும் அரசு அனுமதிக்க வேண்டுமெனச் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை வைப்பதாக அதன் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.