குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்தும் ஹவுத்தி படைகள்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போரில் குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஏமன் தகவல்துறை அமைச்சர் அல் இர்யானி கூறும்போது, “ஈரானின் லட்சியங்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் போர்களுக்கு குழந்தைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் அவர்களின் உரிமைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி கொடுக்கின்றனர். போர்களில் குழந்தைகளை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

ஏமனில் போர் தொடங்கியது முதல் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்தி இருப்பதாக மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

(நன்றி Hindu Tamil)