ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

யாரையும் கொல்ல மாட்டோம், தாக்க மாட்டோம், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் – ஆனால், இஸ்லாமிய முறையிலான ஆட்சியை வழங்குவோம் என்று தாலிபன்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், பாரம்பரிய முறையிலான ஆட்சி என்பது பெண்களுக்கு கல்வி மறுப்பது, நவீன ஆடைகளை தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சார்ந்தது. இந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் தாலிபன்கள் இல்லாத ஆளுகை, 20 வயதில் இருக்கக் கூடிய ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.

இப்போது தாலிபன்களின் ஆளுகை மீண்டும் திரும்பவிருப்பதால், அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் அந்த இளம் தலைமுறையின் பெற்றோர், உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக காபூல் நகர வீதிகளில் ஆயுதங்களுடன் நடமாடும் தாலிபன்கள், வீடுகளில் சோதனை செய்து பொதுமக்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாமல் வாழ அச்சம் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் பல மைல்கள் தூரத்தில் உள்ள விமான நிலையதுத்துக்கு நடந்தே வந்துள்ளனர்.

காபூல் விமான நிலையம் மட்டுமே தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பயணிகள் விமான சேவைக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று காலையில், ஒரு சில ஆப்கானியர்கள் மற்றும் அமெரிக்க தூதரக ஊழியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், காபூல் விமான நிலைய ஓடுபாதையில் தயார் நிலையில் இருந்தது. வெகு நேரமாகியும் அந்த விமானத்தை எடுக்க முடியாத அளவுக்கு அதைச் சுற்றிலும் ஆப்கானியர்கள் நின்று கொண்டிருந்தனர். தங்களையும் விமானத்தில் ஏற்றிச் செல்லுமாறு அவர்கள் குரல் கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் மக்கள் சூழ்ந்திருந்தபோதும், விமானத்தை இயக்க அதன் விமானிகள் தயாராகினர். ஓடுபாதையில் விமானம் செல்லும்போதே அதன் சக்கரத்தின் மேல் பகுதியிலும் இறக்கை பகுதியிலும் சில ஏற முற்பட்டனர்.

ஆபத்தான இந்த சூழ்நிலையை தடுக்க அங்கு போதிய பாதுகாப்புப் படையினரும் இல்லை. அத்தகைய சூழலில்தான் விமானம் இயக்கப்பட்டு மேல்நோக்கிப் பறந்தது.

அப்போதும் தங்களுடைய பிடியை விட்டுக்கொடுக்காத இருவர் மேலே பறந்த நிலையில், திடீரென்று அவர்கள் கீழே விழுந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த காட்சிகள், ஆப்கானிஸ்தானை விட்டுப் புறப்பட்டால் போதும் என் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டதையே காட்டுகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் விமான நிலைய ஓடுபாதையின் பல இடங்களில் தரையிறங்கிய வெளிநாட்டு விமானங்கள் மீண்டும் பறக்க அனுமதியில்லாததால் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை, அவற்றில் ஏறிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நூற்றுக்கணக்கானோர் அந்தந்த விமானங்களுக்கு அருகேயே முகாமிட்டிருக்கிறார்கள்.

முன்னதாக, விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருக்கைகள் நிரம்பியதால் அதன் கதவுகள் அடைக்கப்பட்டன. இருப்பினும், விமானத்துக்குள் செல்ல பயன்படுத்தப்படும் படிக்கட்டு மேடையில் 50க்கும் அதிகமானோர் நின்று கொண்டு விமானத்தை விட்டு அந்த படிக்கட்டு மேடையை அகற்ற முடியாமல் செய்தனர்.

அந்த விமானத்தை சுற்றிலும் கூட்டம் அலைமோதியது. இதனால், துப்பாக்கி சூடு நடத்தி அமெரிக்க படையினர் கூட்டத்தை கலைத்தனர்.இந்த சம்பவங்களால் சுமார் 5 பேர் இறந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் என்ற சர்வதேச செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பலியானவர்கள் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து இறந்தார்களா இல்லை நெரிசலில் மிதிபட்டு இறந்தார்களா என்பதை அனுமானிப்பது கடினம் என்று சம்பவ இடத்தில் இருந்த மற்றொருவர் கூறினார்.

முன்னதாக, திங்கட்கிழமை காலையில் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தின் காட்சிகள் இடம்பெற்ற காணொளியை உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

காபூல் விமான நிலையத்தில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களையும் தூதரக ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு அமெரிக்கா தற்போது முன்னுரிமை கொடுத்துள்ளது.

அத்தகைய பயணிகளுக்கு ரகசியமாக விமானத்தில் ஏறுவதற்கான பாஸ்கள் வழங்கப்பட்டு தனி அறைகளில் அமர வைக்கப்பட்டிருந்ததை பார்த்து கோபம் அடைந்த சிலரும் விமானங்களை முற்றுகையிட முயன்றுள்ளனர். இதனால்தான் அங்கு பதற்றம் அதிகமாகியதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அழைத்து வர தமது ராணுவ ஹெலிகாப்டர்களை காபூலுக்கு அமெரிக்கா அனுப்பியிருக்கிறது.

(நன்றி BBC Tamil)