அமைச்சர் : நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று, வாக்காளர்களின் வயது வரம்பை அரசாங்கம் குறைக்கும்

டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக, வாக்கு18-ஐ அமல்படுத்த வேண்டுமென்று புத்ராஜெயாவுக்கு உத்தரவிட்ட கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய எந்த உத்தரவும் இதுவரை இல்லை என்று சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜஃபார் தெரிவித்தார்.

வாக்காளர்களின் குறைந்தபட்ச வயதை, நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள், 21-லிருந்து 18-ஆகக் குறைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் பின்பற்றும் என்று அவர் சொன்னார்..

“நீதிமன்ற உத்தரவை நாம் செயல்படுத்துகிறோம்.

“நாங்கள் மேல்முறையீடு செய்ய விரும்புகிறோமா வேண்டாமா? இதுவரை மேல்முறையீடு செய்ய அரசாங்க உத்தரவு எதுவும் இல்லை; எனவே, நீதிமன்றத்தின் முடிவைக் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியது சட்டம்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2019-இல், புதிய வாக்களிக்கும் வயதை நாடாளுமன்றம் அங்கீகரித்தது, ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.