ஆப்கானிஸ்தான் மனிதாபிமான உதவிக்கு ரூ. 4,442 கோடி நிதி கேட்கும் ஐ.நா

ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 4,442 கோடிக்கும் அதிகமான நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்றைய நாளின் பிற்பகுதியில் ஐ.நா அவை ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தாலிபன் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் ரூ. 4,442 கோடி அளவிலான நிதியுதவி அந்நாட்டுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.

“நாடு மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. நீடித்த மோதல், கடுமையான வறட்சி மற்றும் கோவிட் -19 பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. அங்கு வாழும் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு ஏற்கெனவே உதவி தேவைப்பட்டிருந்தது,” என்று செய்திக்குறிப்பில் ஐநா தெரிவித்துள்ளது.

“ஆப்கானிஸ்தானில் சமீபத்திய முன்னேற்றங்கள் அங்கு ஏற்கெனவே நிலவி வந்த பாதிப்பை அதிகரித்துள்ளது,” என்றும் ஐ.நா கூறியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இஸ்லாமியவாத போராளிகள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு முன்பே, உள்நாட்டு மோதல் காரணமாக இந்த ஆண்டு 5,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது, அந்நாட்டில் தற்போது 35 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

(நன்றி BBC TAMIL)