‘மிகவும் மோசமான நிலையில் வடக்கு கிழக்கு பெண்கள்’

உள்நாட்டுப் போருக்குப் பின்னான காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்னைகளை எதிர்கொள்வதாக அனைத்துலக நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ‘இண்டர்நேஷனல் கிரைசஸ் குரூப்’ ( ஐசிஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது.

இன்றும் பல விதமான காரணங்களால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் வன்செயல் குறித்த அச்சங்களை எதிர்நோக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அவர்களது நடமாடுவதற்கான ஆற்றல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

பெரிதும் இராணுவ மயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ் பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும் தமது வாழ்க்கை குறித்த கட்டுப்பாடு எதுவும் அவர்களது கையில் இல்லை என்றும் அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது என்றும் ஐசிஜி அமைப்பு விமர்சித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு விடயங்கள், அதிகரித்த அச்சங்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் பெரும்பாலும் நிராகரிப்பதாக அது கூறுகிறது.

இந்த முன்னாள் போர் வலயத்தில் உள்ள பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் சாவால்கள் தொடர்பில் சாதகமாக நடவடிக்கைகளை எடுக்க அனைத்துலக சமூகமும் தவறி விட்டது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன் அந்தப் பெண்களின் பிரச்னைகளை களைவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட, உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெண்களின் உடல் ரீதியான பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது அச்சங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் மூடுவதன் மூலமும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்கள் இடங்களை திரும்ப வழங்குவதன் மூலமும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.