கொழும்பில் தூசி துகள்களின் அளவு அதிகரிப்பு

தற்போது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலையுடன் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நிலவும் பனிமூட்டமான சூழல் தொடர்பில்  ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (07) பிற்பகல் வாக்கில் புயலாக உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாளை காலை தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுவேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை அடையும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பால் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற பிரதேசங்களில் மீள் அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த பகுதிகளுக்கு மேலதிகமாக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

-ift