இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியாக சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானம்

இலங்கையில் கோவிட் பூஸ்டர் தடுப்பூசியாக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஆண்டில் கோவிட் தொற்று தலைதூக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று அதிகரிப்பு

1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு பொறுப்பாளர் டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் தற்போதைக்கு பாரியளவு ஆபத்து கிடையாது என தெரிவித்துள்ளார்.

புதிய திரிபுகள் நாட்டுக்குள் பரவுவதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்யும் வகையில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி

நாட்டில் 8.2 மில்லியன் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

202571 பேர் மட்டும் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர். இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-ibc