உக்ரைன் போர்: ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம்

உக்ரைன் போரில் ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்து உள்ளனர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 360-வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் இன்று காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன.

இதனால், மின்சார கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் மின் சப்ளையை குறைத்தனர். கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. பாக்முத் நகரின் கிழக்கே போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

இதற்கு ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முனிச் மாநாட்டின் ஒரு பகுதியாக பேசும்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதேபோன்று, பாக்முத் பகுதியில் போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷியா, மேற்கத்திய நாடுகள் ரஷியாவை அழிக்க முற்படுகின்றன என குற்றச்சாட்டு கூறியது. சில நாட்களுக்கு முன் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது. எனினும், அமெரிக்கா கூறும்போது, ரஷியாவின் கூலிப்படை நிறுவனம் என கூறப்படும் வாக்னர் குழுவை சேர்ந்த 30 ஆயிரம் பேர் போரில் மரணம் அடைந்து உள்ளனர்.

டிசம்பரில் இருந்து உக்ரைனில் போரில் உயிரிழந்த வாக்னர் வீரர்களில் 90 சதவீதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

 

-dt