IMF இலங்கைக்கு வழங்கிய கடனுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுவுமின்றி, சர்வதேசநாணய நிதியம், இலங்கை அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது.

இது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஏற்பாடு, நேரடியாக ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்கான தண்டனையிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான பொருளாதாரக் கொள்கை

அப்பாவி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கைகள் இரத்தத்தில் நனைந்திருக்கும் நேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உயிர்நாடியை வழங்குவது நெறிமுறையற்றது மற்றும் அநீதியானது மட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கையுமாகும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகக் கடன் வழங்கப்பட்டபோது இலங்கை அரசாங்கங்ளின் இராணுவமயமாக்கல் பிரச்சினையை உரியமுறையில் கையாளவில்லை.

தமிழர் தாயகத்தை இராணுவ மயமாக்குவதற்காகக் கொடுக்கப்பட்ட விலை அதிகம். அதேநேரம் வீண் செலவுகள், ஊழல் மற்றும் நாட்டின் சர்வதேச கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமைக்கு இராணுவ கட்டமைப்பும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-ib