இலங்கையின் கொலைக்களத்தை பான் கீ மூன் பார்வையிட்டார்

சானல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் காணொளியை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பல தடவை இது தொடர்பான கேள்வியை ‘இன்னர் சிட்டி பிரஸ்’ பான் கீ மூனின் பேச்சாளரிடம் எழுப்பி வந்துள்ளது. இறுதியாக நேற்று எழுத்து மூல கேள்வி ஒன்றின் மூலம், “பான் கீ மூன் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்தாரா? இல்லையா?” என்பதற்கு பதில் தருமாறு இன்னர் சிட்டி பிரஸ் கோரியிருந்தது. அதில் ஆம் அல்லது இல்லை என்பதையாவது குறிப்பிடுமாறு கோரப்பட்டிருந்தது.

இதற்கு சுமார் 4 மணி நேரங்களின் பின்னர் ஐநா செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கி பதிலளித்துள்ளார்.

இலங்கையின் கொலைக்களம் தொடர்பான கேள்விக்கு “ஆம்” என்று பதில் வழங்கப்பட்டுள்ளதாக ‘இன்னர் சிட்டி பிரஸ்’ குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இறுதிப்போரின் போது பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜய் நம்பியாரின் பங்களிப்புடன் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையின் கொலைக்களம் காணொளியை பான் கீ மூன் எப்போது பார்வையிட்டார். அது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்றும் இன்னர் சிட்டி பிரஸ் எழுத்துமூல கேள்வியை எழுப்பியிருந்தது. 

அதற்கு மார்டின் நெசர்கி, இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை நல்லிணக் ஆணைக்குழு தொடர்பான அறிக்கையும் பான் கீ மூன் ஆராய்வதாகவும், அதன் பின்னர் இது குறித்தும் கருத்துக்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

TAGS: