சிரம்பானில் மெர்டேகா அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து பணியாளர் ஒருவர் இறந்தார்

நெகிரி செம்பிலான் மாநில அளவிலான 66வது தேசிய தின கொண்டாட்டங்களை ஒட்டி இன்று டதாரன் மஜ்லிஸ் பண்டாரயா சிரம்பானில் நடைபெற்ற அணிவகுப்பின்போது மக்கள் தொண்டரின் (Rela) பணியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர்  ACP அரிபாய் தாராவே(Arifai Tarawe) கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் 53 வயதுடைய நபர் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து காலை 10 மணியளவில் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்.

“பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் இதயப் பிரச்சனை (coronary artery occlusion) எனக் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள் அல்லது சம்பவத்தைப் பார்த்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆதி குசைனி சரிபுதினை 0127707282 என்ற எண்ணிலோ அல்லது சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 066033222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.