தமிழும் இணைந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023

உலகலாவிய இலக்கிய விழாக்களில் தமிழுக்கான அங்கீகாரங்கள் கிடைப்பது அரிது. 2011 முதல் நம் நாட்டில் நடைபெறும் உலகலாவிய இலக்கிய விழாவான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில்  (GTLF) பதினோரு ஆண்டுகளாக தமிழ் இடம்பெறாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

எழுத்தாளர் ம.நவீனை தமிழ் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமித்து கடந்த வருடம் முதல் தமிழுக்கு இரண்டு அரங்குகளை இக்குழுவினர் வழங்கி வருகின்றனர்.

மலேசியாவில் நடைபெறும் ஆகப் பெரிய உலக இலக்கிய விழாவாகக் கருதப்படும் GTLF லண்டன் புக் ஃபேர் இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் இலக்கிய விழா விருதைப் (LBF International Excellence Awards) பெற்ற முதல் தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விழா என்பது குறிப்பிடத்தக்கது.

உலக இலக்கியம், மொழிபெயர்ப்புகள்,  பல்வேறு கலைகள் என நான்கு நாள் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வார இறுதியில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் பதின்மூன்றாம் ஆண்டாக நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை இவ்வாண்டும் நடைப்பெற உள்ளது.

இவ்வருட  ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின் கருப்பொருள் ‘அறியப்படாத உலகம்’ ஆகும்.

13 நாடுகளைச் சேர்ந்த 35 எழுத்தாளர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் விழாவில் பிரிட்டிஷ் நாவலாசிரியர்  ஜியோஃப் டியெர் (Geoff Dyer), SEA விருது பெற்ற தாய்லாந்து எழுத்தாளர் வீராபோன் நீதிபிரபா (Veeraporn Nitiprapha) மற்றும் உதிஸ் ஹேமாமூல் (Uthis Haemamool),  Miles Franklin இலக்கிய விருதை வென்ற மிஷால் டெ க்ரெத்செர் (Michelle de Kretser),  கவிஞரும் பன்முக கலைஞருமான  பர்மியப்  படைப்பாளி மவுங் டாய் (Maung Day ), தமிழ் இலக்கியவுலகில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான யுவன் சந்திரசேகர், பன்முக கலைஞரும் எழுத்தாளருமான தைவானைச் சேர்ந்த வூ மிங் யீ (Wu Ming-yi) மற்றும் அமெரிக்க ஊடகவியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்பாடல் பேராசிரியர் ஜெனட் ஸ்தில் (Janet Steele) ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

மேலும் இவ்விழாவில் பல விருதுகளையும் சிறப்புகளையும் வென்ற உள்நாட்டு எழுத்தாளர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 அவர்களில், 2023க்கான தேசிய கவி விருது பெற்ற, பேரா. லிம் சுவி தின் (Professor Lim Swee Tin), 2019 காமன்வொல்ட் சிறுகதை போட்டி வெற்றியாளர் சரஸ் மாணிக்கம், 2018 ஃபிராஸ் இலக்கிய விருது (Prix du Premier Roman) வெற்றியாளர்  ஷிஹ் லி கெள( Shih-Li Kow)  ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்விழா Loft29  Gat Lebuh Gereja மற்றும் Mano Plus on Beach Street  ஆகிய இரண்டு இடங்களை விழா அரங்காகக் கொண்டு நடைபெறவுள்ளது. எழுத்தாளர்களுடன் நேரடி சந்திப்பு, குழு விவாதங்கள், வாசிப்பு, நூல் அறிமுகம், கண்காட்சிகள்,  திரைக்காட்சிகள் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்விழாவின் மற்றுமோர் அங்கமாக GTLFவின் ‘மூவாரா’ தொகுப்பு நூல் வெளியீட்டையும் வாசகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கலாம். மலேசியாவின் இளம் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளோடு, தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்தாளர்களின் படைப்புகளும் உலகின் பிற நாடுகளின் எழுத்தாளர்களின் படைப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்பாக அந்த நூல் இருக்கும்.

இந்நூலுக்கு, வான் நேர் அஸ்ரிக், டெபோராஹ் அகுஸ்தின் ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.  இவ்வாண்டு ’மூவாரா’ Inisiatif Buku Darul Ehsan (IBDE) எனும் பதிப்பகத்தின் வழி வெளியீடு காணும்.

இலவசமாக நடைபெறும் இந்த விழாவில் தமிழ் இலக்கியத்தின் இணை இயக்கமாக வல்லினம் இணைந்துள்ளது.

மலேசிய சிங்கை எழுத்தாளர்கள், தமிழக எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கான அரங்குகள் என நவம்பர் 25, 26 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு நிகழ்ச்சிக்கு வரும் இலக்கிய ஆர்வளர்களுக்கான தங்கும் வசதிகளை வல்லினம் ஏற்பாடு செய்யும்.

எனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் இலக்கிய ஆர்வளர்கள் ம. நவீனை (0163194522) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.