நக்கீரன் பணிமனை அடித்துநொறுக்கப்பட்டது; அதிமுக மீது குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை பணிமனை, மாநிலத்தை ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நக்கீரன் பத்திரிகைக்கு எதிராக அதிமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நக்கீரன் இதழ்கள் கொளுத்தப்பட்டதாகவும், நக்கீரன் பத்திரிகையை விற்ற கடைகள் மீ்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நக்கீரன் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், நக்கீரன் பணிமனை மீதான தாக்குதலுக்கும் அதிமுக-வினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. அசோக் கூறினார்.

சனிக்கிழமை வெளியான நக்கீரன் இதழில் தங்கள் கட்சியின் தலைவியும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக சித்தரித்ததை எதிர்த்து தாங்கள் ஆர்பாட்டம் மட்டுமே செய்ததாக அசோக் மேலும் கூறினார்.