கொள்ளையடிக்கப்படும் நகைகள் யாரிடம் விற்கப்படுகின்றன?

இராகவன் கருப்பையா- அண்மையில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்ததிலிருந்து வழிப்பறிக் கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டதை நாம் காண்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்களினால் பெரும்பாலும் இளம் பெண்களும் குடும்ப மாதர்களும்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மை.

அவர்களில் நிறைய பேர்கள் அதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யாமல் கடந்துச் செல்கின்றனர் என்று தெரிகிறது.

“ஆமா, புகார் பண்ணி என்ன நடக்கப்போகிறது? என்னுடைய நகை கிடைக்கவா போகிறது? உயிர் தப்பியதே போதுமடா சாமி,” எனும் ஆதங்கத்தில் அவர்கள் பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

இத்தகையோரின் குறைபாட்டில் ஓரளவு நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இதுவரையில் புகாரளித்தோரில் எத்தனைப் பேர்களுக்கு அவர்களுடைய நகைகள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன? எனும் கேள்வி எழுகிறது.

அப்படியென்றால் வழிப்பறிக் கொள்ளையர்கள் பிடிபடுவதில்லையா? அப்படியே பிடிபட்டாலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படுகின்றனவா? இல்லையென்றால் அந்த நகைகள் எங்கே யோய் சேருகின்றன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பெரும்பாலான சமயங்களில் எத்தரப்பில் இருந்தும் பதில்கள் கிடைப்பதில்லை.

ஒருசில வேளைகளில் நகைக் கடைகளில் கொள்ளையிடுபவர்கள் அவ்விடத்திலேயே சுட்டுக் கொள்ளப்படுகின்றனர் அல்லது வேறு எங்காவது சுட்டுக் கொள்ளப்படுவதாக காவல்துறையினர் அறிவிக்கின்றனர்.

வழிப்பறிக் கொள்ளைகளை புரிந்துவிட்டு அல்லது நகைக் கடைகளில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் செல்பவர்கள் அந்த நகைகளை எங்கே கொண்டு போகிறார்கள், யாரிடம் கொடுக்கிறார்கள் போன்ற விவரங்கள் நமக்குத் தெரிவதில்லை.

எனினும் அந்நகைகளை அவர்கள் பொற்கொல்லர்களிடமோ, அடகுக் கடைகளிலோ, தனிப்பட்டவர்களிடமோ கூட விற்பனை செய்யக் கூடும் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இக்கூற்று உண்மையாக இருக்குமேயானால் அவற்றை அடிமட்ட விலைக்குத்தான் அவர்கள் விற்பார்கள், அல்லவா?

இப்படி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்குபவர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவருவதில்லை. திருட்டுப் பொருள்களை வாங்குவது சட்டப்படி குற்றம்தானே! அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்றால் ஏன் தண்டனை இல்லை எனும் கேள்வியும் எழுகிறது.

திருட்டுப் பொருள்களுக்கு சந்தை இருப்பதால்தானே கொள்ளையர்கள் மிகத் துணிச்சலாக அக்காரியங்களை புரிகின்றனர்! அவர்களுக்கென வாடிக்கையாளர்கள் எங்கோ தயார் நிலையில் காத்திருக்கின்றனர் என்பதில் துளியளவும் நாம் ஐயுற வேண்டிய அவசியமில்லை.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்க ஆளில்லையென்றால் கொள்ளையர்கள் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?

ஆக  கொள்ளையர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அதே வேளையில், அவர்களிடம் கொல்லைப்புறமாக நகைகளை வாங்குபவர்கள் மீதும் கடுமையான குற்றப் பதிவு செய்யப்பட வேண்டும்.

அப்படிச் செய்தால் ஒரு வகையில் கொள்ளைச் சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருக்கும் அல்லவா?

அது மட்டுமின்றி கொள்ளைச் சம்பவங்களின் போது கடுமையான காயங்களுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள் அல்லது துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பவர்களுக்கு நீதி கிடைத்த மாதிரியும் இருக்கும்.