சிறீலங்கா நோக்கிப் படையெடுக்கும் அமெரிக்க உயர் அதிகாரிகள்!

அமெரிக்காவின் நான்கு உயர்நிலை அதிகாரிகள் அடுத்த இரண்டு வாரங்களில் சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கூறுகிறது.

சிறீலங்காவின் அரசதரப்பையும் குடியியல் சமூகப் பிரதிநிதிகளையும் அரசியல் தலைவர்களையும் வர்த்தகத் துறையினரையும் சந்தித்துப் பேசவே அமெரிக்க அதிகாரிகள் நால்வரும் கொழும்பு வரவுள்ளனர்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தந்திரோபாய கற்கைகளுக்கான அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லறோக்கோ, ஜனவரி 15-ம் நாள் தொடக்கம் 19-ம் நாள் வரை சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

35 ஆண்டுகளாக இராஜதந்திரியாக இருந்த இவர் இந்த நிலையத்தில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்து கொண்டவர்.

அமெரிக்க வர்த்தகத் துறையின் ஆபிரிக்க, மத்தியகிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச்செயலர் ஹாலி வினயாட் ஜனவரி 17-ம் நாள் தொடக்கம் 19-ம் நாள் வரை சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் துறையின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் கலாநிதி அலிசா அரஸ் எதிர்வரும் 18-ம் நாள் தொடக்கம் 24-ம் நாள் வரை சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் துறையின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலர் தோமஸ் ஓ மலியா எதிர்வரும் 20-ம் நாள் தொடக்கம் 26-ம் நாள் வரை சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இராஜாங்கத் துறையில் பணியாற்றி வருகிறார் என்று அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு அடுத்தடுத்து நான்கு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் குறுகிய காலப்பகுதிக்குள் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

TAGS: