பஹாங் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி

அடுத்த வாரம் முதல் அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ கொள்கையை பஹாங் அரசு அமல்படுத்தும் என்று மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் இன்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மோதலால் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு குறித்த பொதுமக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வான் ரோஸ்டி கூறினார்.

“பஹாங் அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் சுழற்சி முறையில்  வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அடுத்த வாரம் முதல் அமல்படுத்த பஹாங் அரசு முடிவு செய்துள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பயணச் செலவுகளால் அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதி இது என்று வான் ரோஸ்டி கூறினார்.

இந்தக் கொள்கை முறையான வகையில் செயல்படுத்தப்படும் என்றும், இது மாநில அரசின் செயல்பாடுகளைப் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

“துறைத் தலைவர்களும் முகமைகளும் அந்தந்தத் துறைகளின் பணித் தேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப இதனை ஒருங்கிணைப்பார்கள்,” என்று கூறிய அவர், இந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் தொழில்முறை கண்ணியத்தை பேணுமாறும் வலியுறுத்தினார்.

தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இத்தகைய நெகிழ்வான வேலை ஏற்பாடுகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நெகிரி செம்பிலான் அரசு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

பொதுச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பொருத்தமான துறைகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து தனது நிர்வாகம் மதிப்பீடு செய்து வருவதாக மந்திரி பெசார் அமினுடின் ஹருன் கூறினார்.

“நாங்கள் ‘வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்” என்று ஊடகத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று, பினாங்கு அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் (WFH) முறையை அமல்படுத்துவதை முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் நிராகரித்தார்; தற்போது அவ்வாறு செய்வதற்கு அவசரத் தேவை எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

மத்திய அரசு அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்குக் கட்டம் கட்டமாக வீட்டிலிருந்தே பணிபுரியும் முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தனியார் துறையினரும் இதைப் பின்பற்றுமாறும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் மற்றும் எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக சிலாங்கூர் அரசாங்கமும் தனது சொந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தை மூன்று வாரங்களில் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

-fmt