சரவாக் புகைமூட்டம் தீவிரமடைந்தததால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டது

சரவாக்கில் புகைமூட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள மொத்தம் 591 பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, செரியான் பகுதியில் காற்றின் தரம் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளது.

காலை 8.30 மணி நிலவரப்படி, செரியானில் காற்று மாசடைவு குறியீடு (API) 241 ஆகப் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசடைவு குறியீடு (API) அளவுகோலின்படி, 0 முதல் 50 வரையிலான அளவுகள் நல்லது என்றும், 51 முதல் 100 வரையிலான அளவுகள் மிதமானது என்றும், 101 முதல் 200 வரையிலான அளவுகள் ஆரோக்கியமற்றது என்றும், 201 முதல் 300 வரையிலான அளவுகள் மிகவும் ஆரோக்கியமற்றது என்றும், 300-க்கு மேற்பட்ட அளவுகள் அபாயகரமானது என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சரவாக்கின் மேலும் எட்டு மாவட்டங்களில் காற்று மாசடைவு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது: ஸ்ரீ அமான் (189), கூச்சிங் (186), சமரஹான் (179), சரிகேய் (173), சிபு (156), பிந்துலு (154), சமலாஜு (145) மற்றும் காபிட் (129).

புகைமூட்டம் காரணமாக கூச்சிங், படாவான், பாவ், லுண்டு, சமரஹான், சிமுஞ்சான், செரியான், ஸ்ரீ அமான், லுபோக் அந்து மற்றும் பெத்தோங் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 591 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறையை மேற்கோள் காட்டி ஹரியான் மெட்ரோ (Harian Metro) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பள்ளி மூடல்களால் 107,590 மாணவர்களைக் கொண்ட 509 தொடக்கப் பள்ளிகளும், 89,733 மாணவர்களைக் கொண்ட 82 உயர்நிலைப் பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கடுமையான புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் நிலவும் காடு மற்றும் நிலத்தீயே காரணமாகும்.

 

 

 

 

-fmt