அனைத்தையும் அழித்து விடும் கொள்கையை அம்னோ பின்பற்றுகிறது

“தங்களது சமயத்தைத் ‘தற்காக்க’ ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு.”

 

 

 

 

டிஏபி: ஆர்டிஎம்-மின் ‘முர்தாட்’ அறிக்கைப் பொறுப்பானவர்களை நீக்குங்கள்

அடையாளம் இல்லாதவன்: நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தில் அது போன்ற குப்பை ஒளியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெறுப்பைத் தருகிறது. அத்தகைய இழிவான செய்திகளை வெளியிட்டவர்களுக்கு வெட்கமே இல்லை.

அரசியல்வாதிகள் தங்கள் நோக்கத்தை அடைய எந்த அளவுக்கு தாழ்ந்து செல்லக் கூடும் என்பதையும் அது காட்டுகிறது. இன வெறுப்பைத் தூண்டி விடுகின்ற அந்த நடவடிக்கையை எடுத்தவர்களை மலேசியர்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

பெர்ட் தான்: பல இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி விட அம்னோ வியூகவாதிகள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ், பெரித்தா ஹரியான், சினார் ஹரியான் ஆகிய நாளேடுகள், டிவி 3, ஆர்டிஎம் 1 போன்ற தொலைக்காட்சி நிலையங்கள் இஸ்லாம் மருட்டலுக்கு இலக்காகியுள்ளது என்னும் தோற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தங்களது சமயத்தைத் “தற்காக்க” ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். “கண்ணுக்குத் தெரியாத” இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அம்னோ எல்லா நேரத்திலும் தலைமை தாங்கும் எனச் சொல்வதே அதன் அர்த்தமாகும்.

அந்த ஊடகங்கள் வெளியிடும் குற்றச்சாட்டுக்களும் தகவல்களும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்குப் பொறுப்பானவர்களை அதிகாரிகளும் தண்டிப்பது இல்லை.

அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு. மலேசியாவை இறைவன் காப்பாற்றட்டும்.

கல்பாஸ்குவீன்: இது மலிவான அரசியல். முக்கிய ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை வெட்கக் கேடானது. “வீரனுக்கு சாவு ஒரு முறையே. கோழைக்கு அன்றாடம் சாவு.” ஆர்டிஎம் 1 மலேசிய மக்களுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. அதற்கும் துரோகம் செய்து கொள்கிறது.

ஸ்விபெண்டர்: எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளுக்கு எதிராக சமய வெறுப்புணர்வைத் தூண்ட அம்னோ இப்போது தொலைக்காட்சி நிலையங்களைப் (ஆர்டிஎம் 1, டிவி 3) பயன்படுத்தி பொய்யான  தகவல்களைப் பரப்புகிறது.

அந்த இரு தொலைக்காட்சி நிலையங்களிலும் அத்தகைய நிகழ்வுகள் நிகழ்வது தெரியாதது போல உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தகவல் அமைச்சர் ராயிஸ் யாத்திமும் நடந்து கொள்கின்றனர்.

TAGS: