காதலர் தினத்தில் இளம்காதலன் கொலை; பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்!

உலகம் முழுவதும் அன்பை பறிமாறும் இவ்வேளையில் இளம் காதலன், தனது காதலியை சந்திக்க சென்ற போது அந்த பெண் வீட்டார் அடித்து உதைத்து அவனது உயிரை பறித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உ.பி. மாநிலம் மீரட் நகர் அருகே இச்சம்பம் நடந்துள்ளது. கேத்வான் நகரை சேர்ந்த ரசீத் (வயது15). இவர் அருகில் உள்ள சர்தானா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். இது அரசல் புரசலாக பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.

காதலர் நாளான இன்று காதலியை சந்தித்தே தீர வேண்டும் என ரசீத்துக்கு எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது அவரது வீட்டுக்கு சென்று பார்த்து பேசி விட வேண்டும் என வீரத்துடன் கிளம்பினார். அங்கு அவளை சந்தித்தார். மகிழ்ச்சி சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

இவர்களது சந்திப்பு மாணவியின் உறவினர்களுக்கு தெரிந்ததும் சந்தித்த இடத்திற்கு வந்தனர். காதலனை பிடித்து, அடித்து துவைத்து எடுத்தனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் ரோட்டில் கிடந்தான். மாணவிக்கும் அடி-உதை விழுந்தது.

தகவல் அறிந்த ரசீத்தின் பெற்றோர்கள் காதலனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது!

TAGS: