“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் விஜய் நம்பியார் கூறியுள்ளார்.

போரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன், சாமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைவது குறித்து தன் மூலமாக அனைத்துலகச் சமூகத்திற்கு சில தகவல்கள் அனுப்பப்பட்டதாக சிரியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் மேரி கொல்வின் தெரிவித்திருந்தார்.

சரணடைபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி வழங்கப்பட்டதாகவும் ஆனால் சரணடையச் சென்றோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையிலேயே, விடுதலைப் புலித் தலைவர்கள் சரணடைவதை மேற்பார்வை செய்ய தான் அனுமதிக்கப்படவில்லை என்று விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மன்றத்தில் தலைமைச் செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகராக (பர்மா விவகாரம்) உள்ள விஜய் நம்பியார், பர்மா நிலைமை தொடர்பில் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த ‘இன்னர் சிட்டி பிரஸ்’ ஊடகவியலாளர், “இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றி உங்களுக்கு என்ன விடயங்கள் தெரியும், அந்த நடவடிக்கைகளில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது” என்று விஜய் நம்பியாரிடம் கேள்வியொன்றைக் கேட்டார்.

இதன்போது, பர்மா சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்க முடியும் என்று விஜய் நம்பியாருக்கு அருகிலிருந்த ஐநா தலைமைச் செயலரின் துணைப் பேச்சாளர் கூறியதை அடுத்து, குறித்த ஊடகவியலாளருக்குத் தேவையானால் இலங்கை விவகாரம் குறித்து பின்னர் தனிப்பட்ட ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என்று விஜய் நம்பியார் கூறினார்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ‘இன்னர் சிட்டி பிரஸ்’ ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த விஜய் நம்பியார், இறுதிக் கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவர் சரணைடைவதற்கு தான் ஏற்பாடு செய்ய முயன்றதாகக் கூறினார்.

சிரியாவில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மேரி கொல்வின், தன்னுடன் தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இருவர் சரணடைவதற்கு நடுநிலமை வகிக்குமாறு கேட்டதாக விஜய் நம்பியார் கூறினார்.

இதன் பின்னர், தான் அமெரிக்க இராஜதந்திரி பிளேக்குடன் இரண்டு தடவைகள் தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் இருவரும் சரணடைவதை கண்காணிக்க செல்லத் திட்டமிட்டதாகவும், செஞ்சிலுவை சங்கத்தால் கடல்வழியாக செல்ல முடியாமல் இருந்ததாகவும் அரசாங்கம் தங்களுக்கு அங்கு செல்ல அனுமதியளிக்கவில்லை என்பதால் தம்மால் போகமுடியாமல் போனது என்றும் விஜய் நம்பியார் விளக்கமளித்துள்ளார்.

“நடு ராத்திரியில் மேரி எனக்கு அழைப்பு எடுத்தார். இரண்டு பேர், நான் அந்தப் பேர்களையும் மறந்துவிட்டேன்.., ஒருவர் சமாதான பணிமனையைச் சேர்ந்தவர், அவர்கள் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் வெளியில் வர ஒருவழியை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவாதம் ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றும் மேரி கூறினார். சரி, நான் அதனைச் செய்கின்றேன் என்று கூறினேன். அது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசினேன். அப்போது ‘சரணடைபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது’ என்று அந்த ஊடகவியலாளரிடம் கூறினார் விஜய் நம்பியார்.

உங்களுக்கு உத்தவாதம் அளிக்கப்பட்டிருந்தால் ஏன் உங்களுக்கு சரணடையும் இடத்துக்குச் செல்ல அனுமதி தரப்படவில்லை? உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரும் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏன் நீங்கள் அதுபற்றி மௌனம் காத்தீர்கள்? என்று மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

‘அவர்கள் அவர்களின் ஆட்களாலேயே சுடப்பட்டிருக்கக் கூடும். எந்த விதமான ஊகங்களுக்கும் செல்ல நான் தயாரில்லை…’என்று பதிலளித்துவிட்டுச் சென்றுள்ளார் போரின் இறுதித் தருணங்களில் இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா பிரதிநிதி விஜய் கே. நம்பியார்

TAGS: