மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் யாழ் மக்கள் அவதி

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதனால் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

‘கிரீஸ் பூதங்கள்’ என்று சொல்லப்படும் இந்த மர்ம நபர்கள் தொல்லை காரணமாக ஆண்கள் இரவு முழுதும் கண்விழித்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பகல் வேளைகளில் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

மக்கள் மாலை 6 மணியுடன் வீடுகளில் முடங்கிவிடுவதுடன், அச்சம் பீதி காரணமாக கிராமங்களில் ஒரே இடத்தில் பெண்களும் குழந்தைகளும் இரவைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊருக்குள் வருகின்ற மர்ம மனிதர்களைக் கண்டதும், அவர்களைப் பிடிப்பதற்காகப் பொதுமக்கள் ஒன்றுகூடி துரத்திச் செல்கின்றபோது, அங்கு வருகின்ற படையினர் மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்குப் பதிலாகப் பொதுமக்களையே கண்மூடித்தனமாகத் தாக்குவதாக நடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

மர்ம மனிதர்களுக்கும் இராணுவத்தினருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகப் பொதுமக்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.