-சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் அறிக்கை, 17.4.2012
அன்புடன் வணக்கம், தமிழ்ப்பள்ளிகள் உரிமம் மீது வாசகர்கள் காட்டும் அக்கறையும், ஆர்வமும் நம் சமூகம் பெற்றுள்ள எழுச்சியை உணர்த்துகிறது. உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.
‘’ இப்பள்ளி அமைந்துள்ள நான்கு ஏக்கர் நிலம் பள்ளி நிர்வாகத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கல்வியமைச்சு கேட்டுக்கொண்டால் அதனை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் தற்போது பகுதி உதவி பெறும் பள்ளியாக உள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியை மத்திய அரசாங்கம் கடமை உணர்வோடு முழு உதவி பெறும் பள்ளியாக மாற்றும் என்ற தனது எதிர்பார்ப்பையும் டாக்டர் சேவியர் வெளியிட்டார். ” (15.4.2012)
எனது அறிக்கையின் மேற்கண்ட பகுதியில், இரண்டு முக்கிய அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நிலம் பள்ளி நிர்வாகத்தின் பெயருக்கு மாற்றப் பட்டுள்ளது. ஆகவே, பள்ளியின் எப்பகுதியையும் கல்வி அமைச்சுக்கு மாற்றிவிட மாநில அரசு நினைத்தாலும் முடியாது. அதற்கு பள்ளி நிர்வாகத்தில் சம்மந்த பட்டுள்ள பல்வேறு குழுக்களும், பள்ளி வாரியமுமே முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் மத்திய அரசு கட்டாய நில கையகப்படுத்தல் சட்டத்தின் படியும் ஒரு நிலத்தை, சொத்தை தனதாக்கிக்கொள்ளமுடியும். ஆக, பள்ளியின் நிர்வாகமும் சொத்தும் நமது கைகளிலேயே இருக்க வேண்டும், என்பது இப்பகுதியில் எழுதும் வாசகர்களின் அவாவாக இருந்தால், அவர்கள் ஆசைகள் நிறைவேற எனது வாழ்த்துகள். இந்தியர்களின் ஆசைகளை நிறைவேற்ற கடப்பாடுள்ள ஒரு நல்ல ஆட்சி மத்தியில் மலர, வாருங்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு உழைப்போம்!
அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் முழு அரசாங்க உதவிபெறும் பள்ளிகளாக இயங்க வேண்டும் என்பது பக்காத்தானின் கொள்கை மட்டுமல்ல, இந்த சமூகத்தின் நீண்ட நாளைய ஆசையும், உரிமையுங்கூட. ஆகவே, சாத்தியப்பட்ட எல்லா சந்தர்பங்களிலும் மக்களின் அந்த ஆசைகளை, எண்ணங்களை கோரிக்கையாக சம்மந்தப்பட்டவர்களின் முன் வைப்பது எனது கடமை.
ஆனால் தமிழ்ப்பள்ளிகள் முழு உதவி பெற பாரிசான் அரசு விதித்துள்ளக் கட்டுப்பாடுதான் பள்ளியின் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. பள்ளியின் முழு உதவியையும் – நில உரிமத்தையும் ஒன்றாக முடிச்சி போட்டு வைத்து விட்டனர், ஆக பாரிசான் ஆட்சி இறுக்கும் வரை முழு உதவிபற்றிப் பேசினால் நில உரிமத்தை பற்றி பேசியே ஆக வேண்டியுள்ளது.
மேற்கண்ட செய்தியில் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி குறித்து நிறைவான கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ள எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி. நாம் வீணாக யாருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்குவதுமில்லை, இப்பள்ளி கட்டுமானத்தை நாங்கள் சாதித்து விட்டதாக எவரிடமும் சுய புகழ் பாடியதுமில்லை. சாதித்தது நாங்கள் அல்ல, சாதித்தது நீங்களே!
நீங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த ஓர் உன்னத முடிவு சிலாங்கூரில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. நிறைவு எதுவாக இருந்தாலும் உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்; குறைகள் ஏதுமிருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த முக்கிய காலக்கட்டத்தில் நாம் திசைமாறி விடக்கூடாது. மிட்லண்ட்ஸ்சில் நம் தமிழ்ப்பள்ளிக்கு அமைக்கப்பட்ட கட்டடம் போன்று தொடர்ந்து நாட்டின் எல்லாப் பாகங்களிலும் எழுப்பப்பட வேண்டும். நம் மாணவர்களை தலைநிமிரச் செய்ய வேண்டும், அவர்களுக்கு மன ஊட்டம் அளிக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, வாருங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்! நன்றி.