அம்னெஸ்டி அறிக்கை : இலங்கை குறித்து கண்டனம்

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் இடம்பெறுவதாகவும் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு விபரமாக குறிப்பிட்டுள்ளது.

அதில் இலங்கை குறித்து குறிப்பிடும் போதே இக் கருத்துக்களை அது கூறியுள்ளது.

மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கும் பல நிகழ்வுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் இருப்பதாகவும் அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இரு தரப்பும் செய்த போர்க்குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்து வந்ததால், அது குறித்து ஒரு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்துமாறு அம்னெஸ்டியும் கோரும் நிலைமை உருவானது என்றும் அது கூறியுள்ளது.

இந்தியா குறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்னெஸ்டி அமைப்பு, பொருளாதார வளர்ச்சியில் தனது கவனத்தை குவித்துள்ள இந்திய அரசாங்கம், பல சந்தர்ப்பங்களில் அதற்கு பதிலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாத்து, வளர்ப்பதை பலியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்தியாவில் 250 பேர் வரை இறந்திருப்பதாகவும், டில்லி மற்றும் மும்பாய் தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அன்னா ஹசாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பத்தில் வெற்றிபெற்றதாக கூறியுள்ள அம்னெஸ்டி, ஆனால் அதற்கான சட்டங்களை கொண்டுவருவதில் நாடாளுமன்றம் தோல்வியடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளது.

உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் பற்றி…

உலக நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்னெஸ்டி அமைப்பு, கடந்த 12 மாதங்களில் உலகின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களால் காண்பிக்கப்பட்ட துணிச்சலுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க உலகத் தலைமைகள் தவறிவிட்டன என்று கூறியுள்ளது.

இதன் காரணமாக ஐ.நா பாதுகாப்பு மன்றம் ஒரு சோர்வு நிலையை எட்டியுள்ளதுடன், அதற்கான தேவைகள் தொடர்பில் பொருத்தமற்ற நிலையை அடைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

தோல்வியடைந்த தலைமைகள், கடந்த ஆண்டில் ஆர்ப்பாட்ட அமைப்புக்களை கொடூரமான வாகையில் அடக்க முற்பட்டதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் சலீல் ஷெட்டி கூறியுள்ளார்.

TAGS: