தமிழர் பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என்கிறார் பொன்சேகா

வடகிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா, அங்கு  மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள இராணுவ படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் என கூறினார்.

“நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், 2010-ம் ஆண்டுக்குள் மீள் குடியேற்றத்தை எப்படி முடிப்பது என்பது பற்றியும் எந்தெந்த இடங்களில் படைமுகாம்களை அகற்றுவது என்பது பற்றியும் தமிழ் மக்களை எதுவித தொல்லைகளுமின்றி எப்படிக் குடியேற்றுவது என்பது தொடர்பிலும் பல திட்டங்களை வகுத்திருந்தேன். அத் திட்டங்களை ராஜபக்சே சகோதரர்கள் அப்போது வெறுத்தனர். ஆனால் 2012-அதாவது இன்று வரை அவர்களால் ஒன்று கூடச் செய்யமுடியாமல் போயுள்ளது என்று பொன்சேகா கூறினார்.

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இராணுவ முகாம்களால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுமாயின் உண்மையில் அது பிரச்சினைதான். அதேபோல், சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்கிறோம் என கூறப்படுகின்றது. ஆனால் அவர்களுக்குச் சரியான புனர்வாழ்வளிக்கப்பட்டதா? அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்களா என்பதையும் ஆராயவேண்டியுள்ளது என்கிறார் அவர்.

TAGS: